மலர்களே,
ஒரு கதை சொல்கிறேன்
கேளுங்கள்.
மலரும் மணமும் பிரிந்து கண்ட்துண்டோ?
இதோ
நன்கு பாருங்கள்...
மணமின்றி வாடி நிற்கும் மலரே நான்...
தேன்ததும்பிய விழிப்பூக்களில்
பெருக்கெடுத்தோடுகிறது கண்ணீர்த்துளிகள்...
குயிலினம் வதுவை செய்ய
நான் கண்ணுற்றேன்...
மனம் பறந்ததம்மா
இராமரைத் தேடி அலைந்து அலைந்து
நித்தம் திரியுதம்மா...
வில்வளைத்து நாணேற்ற
அயோத்யாப் புத்திரன் கரம்பிடித்தேன்...
இன்றோ அயோசனம் தெரியுது கைகளிலே...
மனதில் குடிகொண்ட மன்னவா...
மாதிமையால் தினம் வாடினேன்...
புள்ளகம் தொலைத்தேன் நான் இன்று
வெறும் புள்ளாய் வாடினேன் உனக்கென்று...
வருடிச் செல்லும் இளங்காற்றே...
போய்ச்சொல் என் மணவாளனிடம்...
வழிமேல் விழிவைத்துள்ளேன்
காதலன் வருகைக்காக...
இலங்கை சிறையினின்று
மீட்டுக்கொள்ளச் சொல் என்னை...
என் மன்னவனே...
காத்திருப்பேன் அதுவரை...
கண்ணீருடன்,
சீதை
(அசோக வனத்திலிருந்து)